Monday, August 30, 2010

அபியும் நானும்…

சார் ! வேற எதாவது ஆர்டர் பண்றீங்களா?
இதோடு சர்வர் இதைக் கேட்பது இரண்டாவது முறை.

இல்ல சார்……. அது வந்து …. இன்னிக்கு கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு,
நிறைய பேர் டேபிள் க்காக வெயிட் பண்றாங்க! அதான் …….
அப்புறம் மொதலாளி என்ன திட்டுவார் சார் ….

தயங்கித் தயங்கி வார்த்தைகளை மென்று முழுங்கினான் சர்வர்…

சரி! இன்னொரு காபியே எடுத்துட்டு வாங்க ! நான் வெயிட் பண்றவங்க வந்ததும் 1 ப்ளேட் பஜ்ஜியும் இன்னொரு காபியும் எடுத்துட்டு வாங்க.

சரி சார் ! சொல்லிவிட்டு சர்வர் நகர்ந்தான்

சர்வர் இன்னொரு காபி எடுத்துட்டு வர்றதுக்குள்ள, நான் வெயிட் பண்ற அபி வர்றதுக்குள்ள உங்களுக்கு நான் யார்னு சுருக்கமா சொல்லிடறேன். என் பேர் அர்ஜுன். எங்க அம்மாக்கு நான் ஒரே மகன். நான் பொறக்கறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு விபத்துல ல எங்கப்பா இறந்துட்டாரு. என்ன படிக்க வச்சது வளத்தது எல்லாமே என் மாமா தான். இன்னிக்கு நான் பொறியியல் பட்டதாரி. காக்னிசன்ட் ல வேலை பாக்கறேன்.

நான் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமா நினைக்கற மூணு பேரு என் அம்மா, என் மாமா அப்புறம் என் அபி. அவளுக்காக தான் இப்போ வெயிட் பண்றேன். இப்போ அபி எனக்கு யாருன்னு நான் சொல்லாமலே கண்டிப்பா உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அபி ஒரு காலேஜ் ஸ்டுடென்ட். MCA படிக்கறா. போன வருஷம் காம்பஸ் செலெக்ஷன் போன போது எதேர்ச்சையா நண்பர்களானோம்! அப்டியே அந்த நட்பு 2 மாசத்துல காதலா மாறிப்போச்சு…

நான் வாழ்கைய ரசிச்சு வாழ ஆரம்பிச்சதே அபிய பாத்த அப்புறம் தான். உண்மைய சொல்றதுன்னா எனக்கு வாழ கத்துக் கொடுத்ததே அபி தான். எப்பவுமே சிர்ரிச்சுக்கிட்டே கலகலப்பா இருக்கற பொண்ணு தான் அபி … அபி வந்தாலே அந்த எடத்துக்கே ஒரு கலகலப்பு வந்துடும் .. அவளோட துருதுருப்ப பார்த்து தான் நான் அவள காதலிக்கவே ஆரம்பிச்சேன்.. சரி சரி .. என் காதல் கதைய இன்னொரு நாள் சொல்றேன் … இப்போ அத விட ஒரு பெரிய பிரச்சன இருக்கு…. அத பத்தி பேசத்தான் அபிக்காக காத்துக்கிட்டு இருக்கேன் ..

ஏய்! ஹலோ !! அர்ஜுன்! நான் வந்து எதிர்க நிக்கறது கூட தெரியாம அப்டி என்ன யோசனை ?

ஹே அபி ! எல்லாம் உன்ன பத்தி தான் !

என்ன பத்தி யா ??

ஆமா .. சரி, அத விடு ! 40 நிமிஷமா உனக்காக வெயிட் பண்றேன் ! இதோட ரெண்டு காபி குடிச்சாச்சு! ஏன் இவ்ளோ லேட்டு ?

சாரி பா .. 1 ஹவர் ஸ்பெஷல் கிளாஸ் அப்டின்னு சொல்லிட்டு SAD சார் 2 மணி நேரம் ரம்பம் போட்டு எங்கள SAD ஆக்கிட்டார்! அதான் லேட்

என்னது SAD சார் ஆ!!

System Analysis and Design !! ஹா ஹா ஹா

இது ஜோக் ஆ ?? இப்போ நான் சிரிக்கணுமா ?

சரி! விடு ! எதோ ட்ரை பண்ணினேன்! என்னப்பா ஆபீஸ் ல ஏதா பிரச்சனையா ??

இல்ல வீட்ல !

வீட்லையா ?

ஆமா! நேத்திக்கு நைட் என் அம்மாவும் , மாமாவும் நான் தூங்கும்போது ஒரு விஷயம் பேசினாங்க. இப்போ நான் வீட்டுக்கு போனதும் அத பத்தி என்கிட்ட பேசுவாங்க.. அதான் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கலந்து பேசிடலாம்னு தான் வர சொன்னேன்.

நேத்திக்கு நைட் , நீ தூங்கும்போதா ? அப்போ ஒரு கனவ பத்தி பேசவா என்ன இவ்ளோ சீக்கிரம் வர சொன்ன?

அபி ! முக்கியமான விஷயம் பேசணும் ! நம்பள பத்தி பேசணும் ! கொஞ்சம் சீரியஸ் ஆ பேசறியா ! ப்ளீஸ் !!

ஒகே! ஒகே! சீரியஸ் !! சரி சரி மொறைக்காத.. சர்வர் வராரு ! நாம எதோ சண்ட போடறோம்னு நினைச்சுக்க போறாரு ! ரிலாக்ஸ் ! சொல்லு என்ன விஷயம் ?

சொல்றேன் …. உனக்காகதான் பஜ்ஜி ஆர்டர் பண்ணினேன் …. சாப்டு, சொல்றேன் …… நேத்திக்கு நைட் நான் தூங்கிட்டேன்னு நினைச்சுக்கிட்டு என் அம்மாவும் மாமாவும் என் கல்யாணத்த பத்தி பேசிகிட்டு இருந்தாங்க…. பேசினாங்க அப்டின்னு சொல்றத விட, பேச்சு வாக்குலவே கிட்டத்தட்ட எனக்கும் என் மாமா பொன்னு சுதாக்கும் நிச்சயதார்த்தமே முடிஞ்சுரிச்சு!

கண் இமைக்காமல் அபி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்

இன்னிக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு போனதும் இத பத்தி பேசுவாங்க. நானும் இன்னிக்கே என் முடிவ சொல்லிட போறேன்.

முடிவுன்னா? என்ன முடிவு ?

நான் அபி நு ஒரு பொண்ண காதலிக்கறேன் , அவள தான் கல்யாணம் பண்ண போறேங்கற முடிவ.

சொன்னா உன் மாமாவும் அம்மாவும் பேசாம இருந்துடுவாங்களா ? யாரு அந்த பொண்ணு ? என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்களா?

நிச்சயமா கேட்பாங்க. மாமா சத்தம் போடுவாரு கோவப்படுவாறு … நாளைக்கு காலைல முதல் வேலையா , ஏன் ஒரு வேளை இன்னிக்கு ராத்ரியே கூட உன் வீட்டுக்கு என் அம்மா பொண்ணு கேட்டு வருவாங்க. அதுனால தான அதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிடுவோம்னு உன்ன அவசரமா வர சொன்னேன்.

அப்போ , ஷாஜஹானா ஆகறதுன்னு முடிவே பண்ணிட்ட? அப்டிதான?

என்ன சொல்ற ?

ஆமா.. ஷாஜஹான் தன் பொண்டாட்டி செத்த அப்புறம் தாஜ்மஹால் கட்டினான்.. நீ என்ன சாகடிச்சுட்டு அப்றமா தாஜ்மஹால் கட்டணும்னு ஆசைப்படற …

அபி! விளையாடாத!

நீ தான் நம்ப வாழ்கயோட விளையாடற! என் அக்காக்கு இப்போ தான் வீட்ல மாப்ள பாத்துட்டு இருக்காங்க. அக்கா கல்யாணம் முடியாம என் கல்யாணத்த பத்தி எப்டி …… ? அர்ஜுன் ! எனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. இப்போ நம்ப காதல் விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்… முடிஞ்சுது கத … நாளைலேர்ந்து என்ன காலேஜ் கூட அனுப்ப மாட்டாங்க. ஐயோ நாளைக்கு எனக்கு செமஸ்டர் எக்ஸாம்.. நான் சீக்கிரம் போகணும் …

சரி .. புரியறது … அதுக்காக என்ன என் மாமா பொண்ணு சுதாவ கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? நான் என்னதான் பண்றது

இப்போதைக்கு இந்த கல்யாண பேச்ச தள்ளி போடு.. ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு தள்ளி போடு .. என் செமஸ்டர் எக்ஸாம் முடியட்டும் … அப்புறம் யோசிச்சுக்கலாம் …. சரியா …

சரி !!

சிறிது நேரத்தில் இருவரும் அவர் அவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தோம்

வழியெங்கும் மனதிற்குள் யோசித்த படியே நடக்க ஆர்மபித்தேன் ….

எனக்கு சுதாவ பிடிக்கல, அழகா இல்ல, கருப்பா இருக்கா , குண்டா இருக்கா இப்டி எதாவது சொல்லி .. ச்சே … சுதா நல்ல அழகு! உண்மைய சொல்றதுன்னா அபிய விட சுதா அழகு…. வேற எதாவது ஒத்துக்கற மாதிரி காரணமா யோசிக்கணும் !

எனக்கு கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்ல. நான் ஆன்மீகவாதி ஆகா போறேன்.. சாமியார் ஆகி மக்களுக்கு …….. எதிரில் கண்ணில் நித்யானந்தாவை வசை பாடி அடிக்கப்பட்ட சுவரொட்டி தென்பட அதையும் கைவிட்டேன் ..

இன்னும் 2 மாசத்துல வெளிநாட்டுக்கு வேலை மாத்தல் ஆகும் போல இருக்கு … அதனால் இப்போ கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. அதுக்கப்றம் பாத்துக்கலாம்னு சொல்லிடலாமா …

கடைசி யோசனை என் மனதிற்கு சரி என்று பட்டது .. சொல்லி பாப்போம் .. ரொம்ப ஒத்துக்கலேன்னா… கடைசியில வேற வழி தெரியலேன்னா அபி பத்தி சொல்லிட வேண்டியது தான்.. மனதிற்குள் யோசித்த படியே வீடு வந்து சேர்ந்தேன் …

வீட்டிற்கு வந்த 10 நிமிடத்தில் அம்மா என் அறைக்குள் வந்தார்

அர்ஜுன், காபி கொண்டு வரட்டுமாடா?

மறுபடியும் காபியா ! மனதிற்குள் நினைத்த படியே , இல்ல மா பசி இல்ல எதுவும் வேண்டாம் …

அர்ஜுன்! மாமா உன்கிட்ட முக்கியமா பேசணும்னு சொன்னார்… அம்மா விற்கு பின்னால் மாமா நின்று கொண்டு இருந்தார்

சொ .. சொல்லுங்க மாமா …

இது வரைக்கும் நானும் உங்கமாவும் உன்னையும் சுதாவையும் கலந்து பேசாம எத்தனையோ தடவ இது பத்தி பேசி இருக்கோம்! ஆனா இன்னிக்கு உங்ககிட்ட இத சொல்லியே ஆகணும் ..

(மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் ! சொல்லனுமா ? அப்போ முடிவே பண்ணியாச்சா…. )

சொல்லுங்க மாமா …

அது வந்து !!

மாமா இப்படி பேச முடியாமல் மென்று விழுங்குவது இது தான் நான் பார்க்கும் முதல் முறை

உங்க மனசுல இப்டி வேற எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு …

வேற எண்ணமா .. ஒரு வேளை நம்ப காதல் தெரிஞ்சு போச்சோ ..

சின்னன் சிறுசுங்க … உங்க மனச புரிஞ்சுக்காம .. உறவு விட்டுட கூடாதேன்னு நாங்க பத்தாம் பசலித்தனமாவே யோசிசுட்டோம்

(யாரோ அபி யா பத்தி இவர்கிட்ட சொல்லிட்டாங்க) இல்ல மாமா அது வந்து ….

இல்ல அர்ஜுன் ..பெத்தவங்களுக்கு புள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம் .. உங்க சந்தோஷத்த விட எங்களுக்கு வேற எதுவும் பெருசு இல்ல… உங்க இஷ்டப்படிதான் உங்க கல்யாணம் நடக்கணும்

ரொம்ப தேங்க்ஸ் மாமா … எங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கலேன்னு நீங்க கோவப் படுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்

என் பொண்ண கல்யாணம் பன்னலேன்னாலும் நீ என் தங்கச்சி மகன் தான்….

தேங்க்ஸ் மாமா … நானே உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சுக்குட்டு இருந்தேன் .. நீங்களே…

நீ ஒன்னும் கவலைப்படாத …. இதோ இப்போ நானும் உன் அம்மாவும் தரகர் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வரனா பாத்து முடிச்சுட்டு.. நானே ஒரு நல்ல பொண்ணா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் ..

(அய்யய்யோ !! நல்ல வேளை ஒளர இருந்தோம்) என்ன மாமா சொல்றீங்க !!!

ஒன்னும் கவலை படாதடா அர்ஜுன் .. உனக்கேத்த பொண்ண இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வர வேண்டியது இந்த மாமாவோட கடமை … சரி … இப்போ கிளம்பினாதான் இருட்டறதுக்குள்ள வர முடியும் .. நாங்க தரகர் வீட்டு வரைக்கும் போயிட்டு வரோம் சரியா…

சொல்லி விட்டு அம்மாவும் மாமாவும் கிளம்பி சென்று விட்டனர்

(என்ன சொல்றார் மாமா …. அபி விஷயம் இவர்களுக்கு தெரியாது போல இருக்கே.. அப்புறம் எப்படி கல்யாணம் நின்னு போச்சு? … ஒன்றுமே புரியலையே… என்ன நடக்குது இங்க.. ) ஒன்றுமே புரியாமால் அவர்கள் சென்ற பாதையையே அர்ஜுன் வெறித்து வெறித்து பார்துக்க் கொண்டிருந்தான் …

எதேர்ச்சையாக அர்ஜுன் வந்த அதே ஹோடேலிர்க்கு சுதாவும் வந்ததோ , அர்ஜுன் அபி சாப்பிட்ட டேபிள் க்கு பின்னால் , சுதா அமர்ந்து இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டதோ , இவனுக்கு முன்னாலேயே வீட்டிற்கு வந்து , ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்ததால் அர்ஜுனை தன் உடன் பிறந்தவனாக பாவிப்பதாக சொல்லி சுதா இந்த கல்யாணத்தை நிறுத்தியதோ பாவம் அர்ஜுனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான் …


அன்புடன்
ஸ்ரீ

நேற்றிரவு என்ன நடந்தது !!

திடீரென நூறு பிள்ளையார் எறும்பு தொடையில் ஊர்வது போல் ஒரே குறுகுறுப்பு …

பான்ட் பாக்கெட்டில் வைப்ரேடர் மோடில் இருந்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தேன்.

டேய் மச்சான் எங்கடா இருக்க? எதிர் முனையில் என் அறைத் தோழன் அருண்.

மொட்ட மாடியில

அடுத்த அரை நிமிடத்தில் மடிப்பு கலையாத உடையுடனும் புத்துணர்ச்சியுடனும் அருண் என் எதிரில்

என்ன பேசினாலும் அவன் உரையாடல்களை எப்பொழுதுமே ஒரு கேள்வியுடனே முடிப்பது அருணின் சுபாவம் .

மணி 8.30 ஆச்சே ஆள காணுமேன்னு தான் போன் பண்ணினேன் . நீ இன்னும் மொட்ட மாடியில என்ன பண்ற ? இன்னிக்கு ஆபீஸ் போகலியா ?

போகணும் … கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் … இனிமே தான் கிளம்பனும்

சரி .. நான் வீட்டு சாவிய மறந்து ஆபீசெலையே வச்சுட்டேன் … நான் கிளம்பறேன்.. நீ போகும்போது உன் சாவிய வச்சு பூட்டிக்கோ …. சரியா ?

சரி நீ வாயிலை மட்டும் தாழிட்டு விட்டு கிளம்பு .. நான் பார்த்துக் கொள்கிறேன்

என்ன டா ஆச்சு உனக்கு .. என்ன ஒளர்ற ?

ஊப்ஸ்! கவிதை எழுதிண்டு இருந்தேன் .. அதான் அந்த ஸ்லாங் ல வே பேசிட்டேன் .. .. நீ வாச கதவ மட்டும் தாப்பாள் போட்டுட்டு கிளம்பு.. நான் இதோ வரேன்

சரி … ஓடம்பு எதா சரி இல்லையா? கண்ணெல்லாம் ஏண்டா இப்டி செவந்து இருக்கு ?

இல்லடா சரியான தூக்கம் இல்ல அதான் ….

கொஞ்ச நேரம் முன்ன்டாடி தான் அசந்து தூங்கிட்டேன்னு சொன்ன … இப்போ தூங்கலைன்னு சொல்ற?

பொய் சொல்வதில் இது ஒரு சரமம் .. என்ன சொன்னோம் என்பதை நினைவில் வைத்து இருக்க வேண்டும்

இல்லடா அது ……. டேய்! கார்த்தாலயே கூண்டுல ஏத்தாத … நீ ஆபீஸ் கிளம்பு …

ஆர் யு ஆல்ரைட் ?

ஒன்னும் இல்ல டா ! நீ கிளம்பு …

இயந்திரத்தனமாய் அடுத்த அரை மணியில் கிளம்பி விட்டேன் … வீட்டில் இருந்து 10 நிமிட நடையில் துரைப்பாக்கத்தில் இருக்கும் என் ஆபீஸ் … வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.. மற்றும் ஒரு முறை வானத்தைப் பார்த்தேன் தெளிவான பிரகாசமான வானம் .

இன்று சூரியன் மறையாமலே இருக்கக் கூடாதா ? உலகில் எங்கோ சூரியன் அஸ்தமனமே கிடையாதாமே … அந்த இடத்தில் எதாவது ஒரு ஜீவ ராசியாக நான் பிறந்து இருக்கக் கூடாதா ? எனக்கு காது கேட்காமல் இருக்கக் கூடாதா ? எனக்கு கண் தெரியாமல் போகக் கூடாதா?

என்ன படிக்கும் உங்களுக்கே நான் எதோ உளறுவது போல் தோன்றுகிறதா ? இதற்கே உளறல் என்றால் என் பிரச்சனை என்ன என்று தெரிந்தால் என்ன சொல்வீர்களோ

எனக்கு நட்சத்திரங்களும் நிலவும் பேசுவது தெளிவாக கேட்கின்றது ! என்ன எதோ விவேக் காமெடி நினைவில் வருகிறதா …. நம்புங்கள் .. நேற்றிரவில் இருந்து எனக்கு வானத்து உயிரினங்களின் குரல் கேட்கின்றது.

நேற்று வரை நானும் சாதாரணமான இளைஞன் தான்… நேற்று இரவு அறையில் வெக்கை அதிகமானதால் மொட்டை மாடியில் படுக்கலாம் என்று சென்றேன். அதில் தான் வந்தது வினை …

வானை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டே இருந்த எனக்கு நட்சத்திரங்களும் நிலவும் தர்க்கம் செய்வது கேட்க ஆரம்பித்தது …. நிலவு தன் ஒளியே சிறந்தது என்றும் , நட்சத்திரங்கள் தன் ஒளியே சிறந்தது என்றும் வாதம் செய்து கொண்டு இருந்தார்கள்

முதலில் தொடங்கியது நட்சத்திரங்களின் வாதம் …

ஓர் இடத்தில் இல்லாமல் வானம் முழுவதும் பரவி இருப்பதால் நிலைவிட நாங்களே சிறந்தவர்கள்!

உடனே இடை மறித்தது நிலா

ஓர் இடத்தில் இருது கொண்டே உலகம் முழுவதும் ஓளி கொடுக்கும் நானே உங்கள் அனைவரை விடவும் சிறந்தவன்

நிலாவைப் பற்றி பாடாத கவிஞனே இல்லை .. மானிடர்களைக் பெரிதும் கவர்ந்த நானே சிறந்தவன்

வால் நட்சத்திரம் , துருவ நட்சத்திரம் என்று மானிடர்கள் எங்களைத்தான் புனிதமாக கருதுகிறார்கள் .. எனவே நாங்களே சிறந்தவர்கள்

இப்படியே இரவு முழுவதும் வாதம் வலுத்தது . ஒரு கட்டத்தில் யாரின் ஓளி சிறந்தது என்ற தர்க்கம் வலுப்பெற , மொத்த கவனமும் திடீரென என் பக்கம் திரும்பியது

“மானுடா .. உன் தீர்பிர்க்கான நேரம் வந்து விட்டது.. நீ சொல் நிலவா? நட்சத்திரங்களா? யாரின் ஓளி சிறந்தது ! “ நிலவு திடீரென என் பக்கம் திரும்பி பேசியது

யாரு நானா? நான் சாதாரண மானிடன் .. நான் போய் உங்க வாதத்திற்க்கா… ? அதுவும் தீர்ப்பா ?

“ஆம், வேற்று க்ரஹ வாசியான நீ தான் சரியான தீர்ப்பாளி .. நீ சொல் ” .. இது நட்சத்திரங்களின் பிரதிநிதியின் குரல்

என் சம்மதம் இல்லாமலே நான் நடுவராகிப் போனேன்

எதற்கு வம்பு இருவரின் ஒளியுமே சரி சமமானது என்று சொல்லி தப்பித்து விடுவோம் … மனதிற்குள் நான் யோசித்த தருணத்தில் …

“மானுடா .. மனதில் கொள்! நீதி நெறி தவறி நீ தவறான தீர்ப்பை வழங்கினால் , உன் தலை சுக்கு நூறாய் சிதறி நீ இறந்து போவாய் ” நிலவின் எச்சரிக்கை அசரீரியாய் ஒலித்தது

தைரியத்தை வரவழைத்து பேசத் தொடங்கினேன் … உங்களில் யாரின் ஓளி சிறந்ததென்று தர்மப்படி என்னால் தீர்ப்பளிக்க இயலாது

என்ன சொல்கிறாய் ! நிலவும் நட்சத்திரங்களும் ஒரு சேரக் கேட்டார்கள்

ஆம் .. இந்தப்புறம் இருப்பதோ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் .. ஆனால் மற்றொரு புறம் ஒற்றை நிலவு .. பிறகு எப்படி உங்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்து நான் தீர்ப்பு சொல்வது ?

சற்று நேரம் வெறும் மௌனம் மட்டுமே நிலவியது ..

எனக்கு ஒரே சந்தோஷம் … சாமர்த்தியமாக பேசி தப்பித்து விட்டோம் ..

என் சந்தோஷத்தை மொத்தமாய் குலைக்கும் விதமாய் பேசத் தொடங்கியது நட்சத்திரத்தின் பிரதிநிதி

நீ சொல்வதும் சரி தான் மானுடா.. நாங்கள் அனைவரும் ஒன்றாய் திரள்கின்றோம் .. அதன் பின் உன் கண்களுக்கு யாரின் ஓளி சிறந்ததாய்த் தெரிகின்றதோ அதை வைத்து நீ தீர்ப்பு சொல்லலாம்

நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் ஒற்றை கோடாய்ச் சேரத் துவங்கியது. ஒரே கோட்டில் ஒன்று சேர்ந்த நட்சத்திரங்கள் அனைத்தும் மொத்தமாய் ஒன்று கூடினால் தெரிந்து விடும் .. யாரின் ஓளி சிறந்தது என்று … இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும் … நானும் பரவசத்துடன் பார்க்கத் தொடங்கினேன்…. திடீரென ஒரே ஓளி மாயம் …. நிலவையும் காண வில்லை .. நட்சத்திரங்களும் காண வில்லை ….. ஒ! விடிந்து விட்டது … சூரியனின் ஒளியில் இருவரும் மறைந்து போனார்கள் .

இரவு நடந்ததை மனதில் அசை போட்ட படியே நடக்கையில் அலுவலகம் வந்து சேர்ந்து இருந்தேன் … வழக்கம் போல் வரவேற்பறையில் களைந்து கிடந்த நாளிதழ்களைப் புரட்டினேன் …. இந்தச் செய்தியைப் படித்தேன்

நேற்று இரவு திடீரென்று வானில் ஒரு ஒளிக் கோடு நகர்ந்து சென்றதைப் பார்த்த மக்கள் வியந்தனர்! இது ஒரு வேளை வேற்று க்ரஹ வாசிகளின் வாகனம் சென்றதாக இருக்குமோ என்று பலர் ஐயம் கொள்கின்றனர் !!

இப்பொழுது என் கவலை எல்லாம் மறைந்தவர்கள் இந்த தர்க்கத்தை மறந்து போவார்களா ? அல்லது மீண்டும் இன்று இரவு பட்டி மன்றம் தொடருமா ??

உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

அன்புடன்

ஸ்ரீ :)

Wednesday, August 25, 2010

ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!

சிறு வயது நினைவு என்பது கனவுகள் போன்றது ! சில நினைவுகள் காலம் தாண்டி ஆழ் மனதில் தங்கி விடும்! சில நிகழ்வுகள் யோசிக்க யோசிக்க நினைவில் வரும் ! அந்த வகையில் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நான் நினைத்தவுடன் உருண்டோடி வந்த நினைவுகள் தான் இங்கே பதிவாகின்றது

இந்தப் பதிவிற்கான உந்துதல் என்ன என்பதை பின்னர் சொல்கிறேன்...

மூன்றாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பர்களின் முகம் கூட அவ்வளாவாய் நினைவில் இல்லை ... நான்காம் வகுப்பிலும் , ஐந்தாம் வகுப்பிலும், நாங்கள் 5 பேர் நல்ல நண்பர்களாய் இருந்தது இன்னும் நினைவில் உள்ளது. 5 நண்பர்களில் மூன்று பேர் சிறுமிகள் , இருவர் சிறுவர்.

எங்கள் 3 பேரில் கிருத்திகாவும் ஒருத்தி .. அவளை சிலர் குண்டு கிருத்திகா என்றும் அழைப்பர் ... அவள் அப்பா பாத்திரக் கடை வைத்து இருந்தார். எங்கள் பள்ளியிலேயே கைக் கடிகாரம் அணிந்து வரும் வெகு சிலரில் அவளும் ஒருத்தி ..

அம்மா.. கிருத்திகாக்கு அவ அப்பா பர்த்டேக்கு வாட்ச் வாங்கி குடுத்து இருக்கார் .. பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க , அவ பணக்காரி அதானால தான் வாட்ச் எல்லாம் வச்சு இருக்கா அப்டின்னு ... என்கிட்ட இல்லையே ? அப்போ நான் பணக்காரி இல்லையாமா?

இது வெகுளித்தனமாய் என் என் அம்மாவிடம் நான் கேட்டது ...

அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல ... உன் கை ஒல்லி யா இருக்கு இல்லையா. அதனால தான் அம்மா உனக்கு வாங்கி தரல.. அவ குண்டா இருக்கறதால அவ கைக்கு வாட்ச் சரியா இருக்கு ... நீ பெரியவளா ஆனதும் உனக்கும் வாட்ச் சரியா இருக்கும் .. நீ யும் போட்டுக்கலாம்... நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போனா நீ ஆசைப்பட்டது எல்லாம் வாங்கலாம் .. எவ்ளோ வாட்ச் வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று என் அம்மா சொன்னது கூட இன்னும் நினைவில் உள்ளது ...

( ஒரு வேளை இன்று எனக்கு கை கடிகாரம் மிகவும் பிடிக்கும் என்பது கூட சிறிய வயதில் வந்த அந்த ஏக்கத்தினால் தானோ ? )
எது எப்படி இருப்பினும் ஒரு முறை கூட கிருத்திகா நான் பணக்காரி என்று தம்பட்டம் அடிக்கும்படியாய் எங்களிடம் பேசியது போன்று நினைவில் இல்லை ..

செந்திலின் பொருளாதாரம் அதற்கு எதிர் மறை. செந்திலின் அப்பா மிதி வண்டி பழுது பார்க்கும் கடை வைத்து இருந்தார்.... அவன் சட்டையில் பொத்தான் இல்லாததால் ஆசிரியை கண்டித்தது இன்னும் நினைவில் உள்ளது ... நட்பிற்காக எதுவும் செய்யுவான் ! திட்டு வாங்கும் விஷயம் என்றால் முதலில் அவனைத்தான் களம் இறக்குவோம் ... ஆசிரியை வெகு ஜோராய் பாடம் நடத்தும் சமயம் " செந்தில் ... கைய தூக்கு " என்றால் உடனே தூக்கி விடுவான் !! "என்ன ? " என்று ஆசிரியை கேட்டால் திரு திரு என்று முழிப்பான் . ஆசிரியையிடம் திட்டு வாங்குவான் ,, வகுப்பு முடிந்ததும் " கைய தூக்கறதுக்கு முன்னாடி எதுக்குன்னு கேக்க மாட்டியா ?? " என்று எங்களிடமும் திட்டு வாங்குவான் ..

மற்றொரு தோழி தர்மாம்பிகை - குல தெய்வத்தின் பெயர் என்று பெற்றோர்கள் வைத்த பெயர் இது. நாங்கள் தர்மா என்று அழைப்போம். ஐந்தாம் வகுப்பு முடிந்தும் தொடர்ந்த எங்கள் நட்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கையில் நெருங்கிய தோழி என்ற அந்தஸ்தை கொடுத்து இருந்தது ... பின்னாளில் அவள் ரிந்தியா என்ற பெயரில் மெகா தொடர் நடிகை ஆகி , பாலச்சந்தரின் இயக்கத்தில் கூட தொலைக்காட்சியில் நடித்தாள். இருவருக்கும் வாழ்க்கைப் பாதை வேறு வேறு ஆகிப் போனதால் தொடர்பு இல்லாமல் போனது ... ஒரு கல்யாண வரவேற்ப்பில் சந்திக்க நேர்ந்த பொழுது ... என்னைப் பார்த்த நொடியில் ஸ்ரீ என்று கூச்சலிட்டு , கட்டிப் பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள் ..

ஐந்து பேரில் இன்னும் நான் சொல்லாத ஒரே நண்பன் நிர்மல் குமார்... எங்களைப் பொருத்தவரை, எங்கள் ஐவரில் அவன் தான் மிகவும் நல்லவன் ... எங்கள் வகுப்பிலேயே அவன் தான் நல்ல பையன் ... எல்லோருக்கும் உதவி செய்பவன் ... நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடியது இன்னும் நினைவில் உள்ளது ... விளையாட்டின் இடையில் களைப்பு தெரியாமல் இருக்க, மிட்டாய் சாப்பிடுவது போன்று ஒரு விளையாட்டும் விளையாடுவோம் ... நிர்மல் நல்ல கருப்பு .. அதனால் அவன் தான் கறுப்பு மிட்டாய் தருவான் .. நான் வெள்ளை மிட்டாய் தருவேன் .. " கருப்பு மிட்டாய் குடு " என்றால் அவன் கன்னத்தைக் குழித்து சிரிப்பான் .. நாங்கள் அந்தக் குழியை கிள்ளி சாப்பிடுவது போன்று பாவனை செய்வோம் .. " வெள்ளை மிட்டாய் குடு " என்றால்
நான் சிரிக்க வேண்டும் ..

நான் கடைசியாய் அவனைப் பார்த்தது ஐந்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடித்த நாள் .. நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை ஆண், பெண் இருவரும் படிக்கும் பள்ளி , ஆறாம் வகுப்பில் இருந்து பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம். கிருத்திகாவும் எங்களோடு அழுதாளா என்பது நினைவில் இல்லை .. ( அதனால் தான் சொன்னேன் இந்த நினைவு ஒரு கனவு போன்று என்று ) மற்ற நான்கு பேரும் அழுதோம் .. செந்திலும் , நிர்மலும் நாங்கள் ஏன் பெண்ணாக பிறக்க வில்லை என்று அழுதார்கள் .. நாங்கள், எல்லோரும் ஏன் ஆணாய்ப் பிறந்து இருக்கக் கூடாது என்று அழுதோம் ..

அந்தப் பருவத்தில் , எங்களுக்கு ஏழை பணக்காரன் , ஆண் , பெண் என்று எந்த பேதமும் இல்லை .. முக்கியமாக ஆண் பெண் பேதம் இல்லை ... .. எங்கள் மிட்டாய் விளையாட்டு போன்று இன்னும் நிறைய விளையாட்டுக்களை நாங்கள் விளையாடி இருக்கின்றோம் .. வெகுளித்தனமாய் பழகினோம் .. குழந்தைகள் குழந்தைகளாக வாழ்ந்தோம்...

இன்றைய குழந்தைகளிடம் இந்த சந்தோஷம் பறிக்கப் படுவது பார்த்து வருத்தப் படுகின்றேன் ..

பி கு : இன்று சிறுவர்களுக்காக தொலைக்காட்சிகளில் போட்டி என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெரியவர்களாக மாறி விடும் அவல நிலையைக் கண்டதின் வெளிப்பாடே இந்த பதிவு ...

பெரியவர்களே ! குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் !! நாம் அடைந்த சந்தோஷம் அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கட்டும் !

அன்புடன்
ஸ்ரீ :)